கஜா புயலால் தஞ்சை மாவட்டத்தின் கடலோர பகுதிகள் உருக்குலைந்து போய் உள்ளன. பலர் வீடுகளை இழந்தும், இருக்க இடமின்றியும் தவித்து வருகின்றனர். மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்துவிட்டனர். புயலால் மீனவர்களின் படகுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.
இந்நிலையில் தஞ்சை மாவட்ட மீனவர்கள் இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்தனர். தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம், ராமர் கோயில் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் இன்று தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினர்.
அப்போது கஜா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும், அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகையை அதிகப்படுத்த தாங்கள் அரசை வலியுறுத்த வேண்டும் எனவும் ஸ்டாலினிடம் மீனவர்கள் கோரிக்கை வைத்தனர். இச்சந்திப்பின்போது தமிழ்நாடு மீனவர் நலச்சங்க மாநில செயலாளர் A.K. தாஜுதீன், அஹமது கபீர், இப்ராஹிம் ஆகியோர் உடனிருந்தனர்.