கர்நாடகாவில் பெய்த கனமழையால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடிய நிலையிலும், அதிரை நீர் நிலைகளுக்கு தண்ணீர் வந்த பாடில்லை. அதிரையை சேர்ந்த பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் அதிரைக்கு நீர் திறந்து விடக்கோரி, மாவட்ட ஆட்சியர் முதல் பல்வேறு நீர்வளத்துறை அதிகாரிகளை கடந்த 3 மாதமாக சந்தித்து கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் கடந்த 9ம் தேதி அதிரை நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளையின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அதிரைக்கு தண்ணீர் திறந்துவிடாத அரசை கண்டித்து நாளை 14.11.2018 புதன்கிழமை காலை 10 மணியளவில் அதிரை ஈசிஆர் சாலையில் பேரூராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
எனவே இந்த சாலை மறியல் போராட்டத்தில் எவ்வித கட்சி பேதமும் இன்றி பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு அதிரைக்கு நீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இதில் அதிரை கடைமடைப் பகுதி விவசாயிகள், நீர்நிலை பாதுகாப்பு ஆர்வலர்கள், மீனவர்கள், ஜமாத்தார்கள், கிராம பஞ்சாயத்தார்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி அடையச் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
இவ்விஷயத்தில் நாம் தொடர்ந்து அலட்சியப் போக்கை கடைபிடித்தால், கூடிய விரைவில் அதிரை குடிநீர் பஞ்சத்தில் சிக்குவது நிச்சயம். நீருக்காக நடைபெறும் இப்போராட்டத்தில் அதிரையர்கள் அனைவரும் கலந்துகொண்டு, அதிகார வர்க்கத்தின் கதவை பலமாக தட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம் !
மறந்துவிட வேண்டாம் !
போராட்ட நாள் : நாளை 14.11.2018 புதன்கிழமை
இடம் : ஈசிஆர் சாலை பேரூராட்சி அலுவலகம் முன்பு
நேரம் : காலை 10 மணி