அதிராம்பட்டினம் பேரூராட்சியின் 7வது வார்டு ஆறுமுக கிட்டங்கி தெருவில் பொதுமக்கள் ஒரு தனியார் நிலத்தில் குப்பைகளை கொட்டி வந்துள்ளனர். இவ்வாறு குப்பையை கொட்டுவது தொடர்ந்து வந்துள்ளது.
இந்நிலையில் அந்நிலத்தின் உரிமையாளர் அங்கு கொட்டப்பட்டிருந்த குப்பைகளை சுத்தம் செய்து ஓரிடத்தில் சேர்த்து வைத்துள்ளார். அக்குப்பைகளை அள்ளவேண்டிய அதிரை பேரூட்சியோ அதனை சுத்தம் செய்யாமல் அலட்சியம் செய்து வருகிறது.
அதிரை பேரூராட்சியில் இது குறித்து புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அள்ளப்படாமல் கிடக்கும் குப்பைகளால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. தற்போது அதிரையில் மழையும் பெய்து வருவதால் அள்ளப்படாமல் கிடக்கும் அக்குப்பைகளால் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவவும் வாய்ப்புள்ளது.
எனவே இவ்விஷயத்தில் அதிரை பேரூராட்சி நிர்வாகம் இனியும் அலட்சியம் செய்யாமல், விரைந்து செயல்பட்டு அக்குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிரை பேரூராட்சி நடவடிக்கை எடுக்குமா ? பொறுத்திருந்து பார்ப்போம் !