முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் முருகன் , சாந்தன் , பேரறிவாளன் , நளினி , ராபர்ட் பயஸ் , ரவிச்சந்திரன் , ஜெயக்குமார் ஆகிய 7 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. முருகன் , சாந்தன் , பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையும் , நளினி உள்ளிட்ட மற்ற 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார்கள். இந்த கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க காலதாமதம் ஏற்பட்டதாக கூறி, அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
மேலும் இந்த 3 பேரையும் விடுதலை செய்வது குறித்து அரசு உரிய முடிவு எடுக்கலாம் என்றும் கூறியது. இதைத்தொடர்ந்து 7 பேரையும் விடுதலை செய்யப்போவதாக அப்போதைய தமிழக அரசு அறிவித்தது. இது தொடர்பாக தமிழக சட்டசபையில் அன்றைய முதலமைச்சர் ஜெயலலலிதா தீர்மானமும் நிறைவேற்றினார்.
ஆனால் 7 பேரின் விடுதலைக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அவர்களின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.
இந்நிலையில் கடந்த ஓராண்டாக 7 தமிழர்கள் விடுதலை தொடர்பான வழக்கை விசாரித்து வந்த சுப்ரீம் கோர்ட் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 தமிழர்களின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் , நவீன்சின்ஹா , கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.
7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் சுப்ரீம்கோர்ட் தெரிவித்துள்ளது. 7 பேரின் விடுதலை குறித்து ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதற்கு எதிரான மத்திய அரசின் வழக்கையும் சுப்ரீம் கோர்ட் முடித்து வைத்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த தீர்ப்பின் காரணமாக 27 வருடம் சிறையில் இருந்து வருபவர்களின் விடுதலை பிரகாசமாகியுள்ளது. தமிழக அரசு அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.