காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால் தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அங்குள்ள கபிணி , கே.ஆர்.எஸ் உள்ளிட்ட அணைகள் நிரம்பின. இதையடுத்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கர்நாடகாவில் இருந்து அதிகப்படியான உபரி நீர் திறந்துவிடப்பட்டதால் மேட்டூர் அணை நிரம்பி , மேட்டூர் அணைக்கு வரும் நீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது.
இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு 1.90 லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால் திருச்சி முக்கொம்புவுக்கு நீர்வரத்து 2.27 லட்சம் கனஅடியில் இருந்து 2.34 லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளது. மேலும் கொள்ளிடத்தில் இருந்து 1.67 லட்சம் கனஅடிநீர் திறக்கப்படுகிறது. இதனால் ஸ்ரீரங்கம் அம்மா படித்துறையின் அனைத்து படிக்கட்டுகளும் நீரில் மூழ்கியது.
மேட்டூர் அணையில் இருந்து 1.90 லட்சம் கனஅடி நீர் திறந்துவிடப்படுவதால் சேலம் , நாமக்கல் , ஈரோடு , கரூர் , திருச்சி , தஞ்சாவூர் , புதுக்கோட்டை , திருவாரூர் , அரியலூர் , பெரம்பலூர் , கடலூர் , நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். காவிரி கரையோர பகுதிகளை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் , பொதுப்பணித்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.