தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா ஊரணிபுரம் கல்லணை கால்வாய் வாய்க்கால் அருகே கடந்த 7ஆம் தேதி இரண்டு டாஸ்மாக் கடைகள் புதிதாக திறக்கப்பட்டன. இந்த கடைகளை மூடக்கோரி ஊரணிபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் கிராமங்களில் உள்ள பொதுமக்கள் அனைவரும் கடந்த 9ஆம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஒரத்தநாடு தாசில்தார் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வாரத்திற்குள் டாஸ்மாக் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். ஆனால் டாஸ்மாக் கடைகளை அகற்றவில்லை.
பிறகு (26.07.2018) அன்று ஊரணிபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பொதுமக்கள், மாணவர்கள், பல கட்சியினர் உட்பட 1500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர்.
இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட 1500 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அப்போது கல்லணை கால்வாய் அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட 4 மாணவர்களை அதிராம்பட்டினம் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தாக்கி கால்வாய்க்குள் தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.