ஆன் லைன் லாட்டரியால், தாலி கூட மிஞ்சாத பெண்கள், அமோக அறுவடையில் போலீசார்..!!
ஈரோடு மாவட்டம் கோபி செட்டி பாளையத்தில், தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி அமோகமாக செயல் பட்டுக் கொண்டிருக்கிறது.
ஒரு நம்பர் லாட்டரி சீட்டு, 12 ரூபாய், இரண்டு நம்பர் கொண்டது- 15 ரூபாய், மூன்று நம்பர் கொண்டது – 25 ரூபாய் என, கோபிச்செட்டிப் பாளையத்தைச் சுற்றி, இந்த லாட்டரி சீட்டுகள் விற்கப் படுகின்றன.
இந்த சீட்டுகளை வாங்குபவரிடம், பேப்பரில் எழுதப்பட்ட ஒரு அலைபேசி எண் கொடுக்கப் படுகிறது. 3 மணி நேரத்திற்கு ஒரு முறை குலுக்கல் நடைபெறுகிறது.
இதன் ரிசல்ட் எண்ணை வாட்ஸ் அப்பில் அனுப்புகின்றனர். குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாயும், அதிக பட்ச பரிசுத் தொகையாக பத்தாயிரம் ரூபாயும் வழங்கப் படுவதாகச் சொல்லப் படுகிறது.
கோபி செட்டி பாளையத்தில், இந்த லாட்டரி டிக்கெட் வாங்குவதில் அடிமை ஆகி உள்ள பலர், வீட்டில் உள்ள பண்டம் பாத்திரங்களை எல்லாம் விற்று இந்த சீட்டுகளை வாங்கி ஏமாறுகின்றனர்.
இன்னும் சிலர், தங்களது மனைவியின் தாலியை விற்று இந்த லாட்டரி சீட்டு வாங்கும் அளவிற்கு, போதையைப் போல, இந்த லாட்டரி சீட்டு மோகத்தில் மூழ்கி உள்ளனர்.
பாரியூர் சாலை, எஸ்.டி.என். காலனி, முத்துஷா வீதி, வாய்க்கால் ரோடு, கருமையா வீதி, வேட்டைக்காரன் கோயில், மொடச்சூர், கரட்டடிபாளையம், ஆகிய இடங்களில் இந்த நம்பர் சீட்டு, ஆன் லைன் லாட்டரி பகிங்கரமாக விற்கப் படுகிறது.
இதனைக் கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக, போலீசில், உள்ள அதிகாரிகளுக்கு மாமூல் சரியானபடி சென்று விடுவதால், அவர்களும் இதனைக் கண்டு கொள்வதில்லை.