நெடுந்தொலைவு செல்லும் அரசு பேருந்துகள் உணவகத்தில் நிறுத்துகிறோம் என்று கூறி, அநியாய கொள்ளை அடிப்பது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், திருச்சியில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட SETC பேருந்து இரவு 9.30மணியை கடந்தும் இரவு உணவிற்காக நிற்கவில்லை.
விழுப்புரம் கடந்து விக்கிரவாண்டி வந்ததும் ஆள் அரவமின்றி இருந்த J கிளாசிக் எனும் உணவகத்தின் முன் பேருந்து நின்றதும், உணவக பணியாளர்கள் பேருந்து அரைமணி நேரம் நிற்கும் சாப்பிட உள்ளே வாங்க என குரல் கொடுத்தபடி இருக்க ஓட்டுநரும், நடத்துனரும் அந்த உணவகத்தின் தனியறைக்குள் புகுந்து கொண்டனர்
இங்கே பயணிகளிடம் மூன்று இட்லி 35.00ரூபாய், தோசை 50.00ரூபாய், பரோட்டா 40.00ரூபாய் இவற்றுக்கு குருமா 90.00ரூபாய் தனி அதுமட்டுமன்றி தண்ணீர் பாட்டில் 25.00ரூபாய், பிஸ்கட் பாக்கெட், குளிர்பானங்கள் என அதில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 5.00ரூபாய் முதல் 10.00ரூபாய், காபி என்கிற பெயரில் களனித் தண்ணீரை 15.00ரூபாய்க்கு விற்பனை செய்து கொள்ளையடித்து கொண்டிருக்கிறது அந்த உணவகம்.
பெரும்பாலான பயணிகள் வெளியூர்களுக்கு செல்லும் போது இந்தக் கொடுமையை அனுபவித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் அரசின் கவனத்திற்கும் அதிகாரிகள் கவனத்திற்கும் சென்றும் கூட நடவடிக்கைகள் எடுக்கப்படாமலேயே இருக்கிறது.
காரணம் கையூட்டு இன்றி வேறில்லை. உண்மையில் இது மக்களுக்கான அரசாக இருக்குமானால் தேசிய நெடுஞ்சாலைகளில் அரசின் சார்பில் ஒருங்கிணைந்த பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட வேண்டும்.
அதில் அரசின் சார்பில் நியாயமான விலையில், தரமான வகையில் விற்பனை செய்யும் தேனீர் கடைகள் உணவகங்கள் சில்லறை வணிக நிறுவனங்கள் அமைக்கப்பட்ட வேண்டும்.
இந்த பிரச்சினை தனிப்பட்ட ஒருவருக்கான பிரச்சனையாக கருதாமல் மக்கள் நலன் காக்கும் பிரச்சினையாக, இப்பிரச்சினைக்கு நிரந்தரமாக தீர்வு காண முயல்கிறேன்’ என்று கூறியுள்ளார்.