ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் கைகலப்பு ஏற்பட்ட நிலையில் அங்கு பதற்றம் நிலவுகிறது.
ஆர்ப்பாட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த போலீசார்தடியடி நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும் கூறி அப்பகுதி மக்கள் கடந்த 100 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். வேதாந்த நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை மேற்கொள்ள இருந்த நிலையில், விரிவாக்கம் செய்யக் கூடாது என்றும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.
ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து மத்திய – மாநில அரசுகள் எந்த நடவடிக்கை எடுக்காத நிலையில் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 100
நாட்களாக போராட்டம் நடந்து வரும் நிலையில் போராட்டம் நடத்துவதற்கு 144 தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. தடையை மீறி ஆயிரக்கணக்கான மக்கள்
ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி இன்று பேரணி சென்றனர். இந்த போராட்டத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். பேரணி சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது.
போராட்டக்காரர்கள் காவல் வாகனத்தை கவிழ்த்தும், கல்லெறிந்தும் நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. ஆர்ப்பாட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தி கட்டுப்படுத்த முயன்று வருகின்றனர். இதனால் பேரணியில் சென்றவர்கள் சிதறி ஓடினர். அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ள்னர். இதனால் அப்பகுதி போர்க்களமாக காட்சி அளிக்கிறது. காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர்புகை குண்டு வீசி ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த முயன்று வருகின்றனர்.
Soure:- Asianet_news_tamil | தமிழன் எக்ஸ்பிரஸ்.