கோடைக்காலம் துவங்கியதால் அதிராம்பட்டினம் பகுதியில் பனை ஓலை விசிறி விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் பழங்காலத்தில் பனை ஓலையை தான் விசிறியாக பயன்படுத்தி வந்தனர். தற்போது நவீனகாலத்தில் பனை ஓலையின் விசிறி மவுசு குறைந்து வருகிறது. இருப்பினும் கிராமத்தில் உள்ளவர்கள் இன்றும் பனைஓலை விசிறிகளை தான் பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது கோடைக்காலம் துவங்கியுள்ளதால் அதிராம்பட்டினம் அஜ்மீர் ஏஜென்சியில் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட பனை ஓலை விசிறி விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.
கடந்தாண்டு ஒரு விசிறி ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒரு மின்விசிறியை பொதுமக்களின் நலன் கருதி ரூ.20க்கு விற்பனை செய்கின்றனர் அஜ்மீர் நிருவாகத்தினர்.
ப்ளாஸ்ட்டிக் விசிறியின் வரத்தால் பனைஓலையின் விசிறி விற்பனை குறைந்து வருகிறது. இருப்பினும் கிராம பகுதிகளை சேர்ந்தவர்கள் பனைஓலை விசிறியை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது ஆறு, குளம், வாய்க்காலில் தண்ணீர் வற்றியுள்ளது. மேலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போனதால் இந்தாண்டு பனை மட்டை விளைச்சல் குறைந்து விட்டது.
வரும் ஆண்டும் இதுபோன்ற நிலை ஏற்பட்டால் 100க்கும் மேற்பட்ட பனை ஓலை விசிறி செய்யும் குடும்பத்தினரின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும் என்று விசிறி விற்பனை செய்பவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.