அதிரை எக்ஸ்பிரஸ்:- ஆசிஃபா வழக்கில் இருந்து விலக வேண்டும் என பார் கவுன்சில் தலைவர் மிரட்டுவதாக வழக்கறிஞர் தீபிகா ராஜவத் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் ஆசிஃபா என்ற 8 வயது சிறுமி கடந்த ஜனவரி 10ஆம் தேதி காணாமல் போனாள். ஒரு வாரத்திற்குப்பிறகு ராஸன்னா வனப்பகுதியில் இருந்து சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்தச் சிறுமியை ஒரு சிறுவன் உட்பட 8 பேர் சேர்ந்து வழிபாட்டுத்தலம் ஒன்றில், மறைத்து வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக டெல்லி தடயவியல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், 18 வயது நிரம்பாத அந்த சிறுவன், சிறுமியை அடித்துக்கொலை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு இந்திய அளவில் கண்டனக் குரல் கள் எழுந்து வருகின்றன. பலரும் சமூக வலைத்தளங்களில் ஆசிஃபாக்கு நீதி வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் அரசு மனித உரிமை அமைப்பின் தலைவரும், வழக்றிஞருமான தீபிகா ராஜவத் (38) ஆஜராகி வாதாடுகிறார். இவர் ஆதரவற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். வழக்கு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தீபிகா, “வழக்கு விசாரணை அன்று நீதிமன்றத்திற்கு சென்ற என்னை, ஜம்மு பார் கவுன்சில் தலைவர் பி.எஸ். ஸ்லதியா மிரட்டினார். நான் நீதிமன்றத்திற்கு வாதாடச் சென்ற போது இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது. நான் பார் கவுன்சில் உறுப்பினராக இல்லை. இருப்பினும் எனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. நான் அவருக்கு பதில் அளிக்கவில்லை. நான் பதிலளிக்க வேண்டியது ஆசிஃபாவின் தந்தைக்கு தான்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “மிரட்டலுக்கு நான் பயப்படவில்லை. இருப்பினும் பாதுகாப்பற்ற தன்மையை உணர்கிறேன். போலீஸாரின் விசாரணையில் எனக்கு நம்பிக்கை உள்ளது. எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஜம்மு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். மிரட்டலுக்கு பயப்படமால் தொடர்ந்து ஆசிஃபாவின் நீதிக்காக போராடுவேன்” என்று கூறினார்.
இதுதொடர்பாக விளக்கமளித்து பார் கவுன்சில் தலைவர் ஸ்லதியா, “நான் எனது சக பணியாளர்களுக்காக பொறுப்பேற்கிறேன். இதுதொடர்பாக நான் பேச விரும்பவில்லை. வழக்கின் போக்கு மாறக்கூடும் என்பதால் கருத்துக்கூற மறுக்கிறேன். என்மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் போலியானவை” என்று கூறியுள்ளார்
புதிய தலைமுறை