காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் பல இன்னல்களைச் சந்தித்து வரும் இந்த நேரத்தில் பிரதமர் மோடி விவசாயிகளையும் இளைஞர்களையும் பக்கோடா விற்கச் சொல்கிறார் என எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் காவடி தூக்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அண்ணாத்துரை தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது.
இதில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை.
பயிர்க் காப்பீட்டுத் தொகை இன்னும் வழங்கபடவில்லை. விவசாயக் கடன்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும். விவசாயிகள் பல இன்னல்களைச் சந்தித்து வரும் இந்த நேரத்தில் பிரதமர் மோடி விவசாயிகளையும் இளைஞர்களையும் பக்கோடா விற்கச் சொல்கிறார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து விவசாயச் சங்கங்களின் கூட்டு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் காவடி தூக்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது ‘பக்கோடா பக்கோடா’ என மோடிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.