இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி வெளியிடும் அறிக்கையில் கூறியிருப்பதாவது;
இந்திய தேசியலீக் கட்சியின் தலைவர் தடா ஜெ. அப்துல் ரஹீம் அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஒரு வழக்கு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றம் மூலம் பிணை(ஜாமீன்) பெற்று சிறையிலிருந்து வெளிவரவிருந்த நிலையில் சென்னை காவல்துறை திடீரென அவர் மீது குண்டர் சட்டத்தை ஏவி அவரை கைது செய்திருப்பது ஏற்கத்தக்கது அல்ல.
தடா.ரஹீம் மீது வழக்கு பதியப்பட்டிருந்தால் அதனை சட்டத்தின் அடிப்படையில் எதிர்கொள்ள அவருக்கு வாய்ப்பு அளித்திருக்க வேண்டும் அதை விடுத்து அவரை முடக்க நினைப்பது சரியல்ல இது அப்பட்டமான மனித உரிமை மீறல் ஆகும். மேலும் ஜனநாயக உரிமைகளை நசுக்கும் செயலாகும்.
ஜனநாய ரீதியாக இயங்கும் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் மீது பழிவாங்கும் நோக்கில் போடப்பட்டுள்ள குண்டர் சட்டம் ஏற்கதக்கது அல்ல. இது ஒரு தவறான முன்னுதாரனம் ஆகும்.
ஏற்கனவே குண்டர் சட்டம் என்பது தமிழக காவல் துறையால் தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது இதை பலமுறை நீதிமன்றம் சுட்டிகாட்டியுள்ளது கண்டித்துள்ளது.
மதபதற்றத்தையும், மதகலவரங்களையும் உருவாக்கும் நோக்குடன் அவதூறு பிரச்சாரங்களையும், வெறுப்பு பிரச்சாரங்களையும் மேற்கொள்கின்ற எச்.ராஜா போன்றவர்களை மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு துணிவில்லாத காவல்துறை தடா ஜெ. அப்துல் ரஹீம் போன்றவர்கள் மீது இத்தகையை கருப்பு சட்டங்களை ஏவுவதை ஒரு காலமும் ஏற்கமுடியாது.
எனவே, தடா ஜெ. அப்துல் ரஹீம் மீது பதியப்பட்டுள்ள குண்டர் தடுப்பு சட்டத்தை உடனே வாபஸ் பெற்று அவரை விடுதலை செய்ய வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.