இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தேசிய தலைவர் எஸ்.எம். பாக்கர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பது..
சமீபத்தில் ஒரு சாதாரண வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா அப்துல் ரஹீம் மீது குண்டர் சட்டத்தை பாய்ச்சியிருக்கிறது தமிழக காவல்துறை. ஜனநாயக மாண்புகளை மீறிய தமிழக காவல்துறையின் இந்தச் செயல் அதிர்ச்சியளிக்கக் கூடியதும் கண்டிக்கத்தக்கதுமாகும்.
குண்டர் சட்டத்தை பிரயோகிப்பதற்கான எந்தவித முகாந்திரமோ, அதற்குரிய தகுந்த வழக்குகளோ தடா அப்துல் ரஹீம் மீது இல்லை. குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யும் அளவிற்கு அவர் மீது எவ்விதப் புகாரும் இல்லை.
ஒரு ஜனநாயக வழியில் இயங்கி வந்த ஒரு கட்சியின் தலைவரை குண்டர் சட்டத்தில் கைது செய்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாததாகும். சமீபத்திய வழக்கில் நீதிமன்றம் மூலம் தடா ரஹீமுக்கு பிணை கிடைத்திருந்த நிலையில் போலீசார் அவர் மீது குண்டர் சட்டத்தை பிரயோகித்திருக்கிறது.
ஒரு அரசியல் கட்சியின் தலைவர் மீது குண்டர் சட்டம் பிரயோகிப்பது என்பது தமிழக அரசுக்கு தேசிய அளவில் அவப் பெயரைத்தான் ஏற்படுத்தும். ஜனநாயக சக்திகளை தமிழக அரசு தொடர்ந்து ஒடுக்கி வருகிறதா என்ற வினாக்கள் எழ இதுபோன்ற நடவடிக்கைகள் காரணமாக அமைந்து விடும். இதுபோன்ற ஒடுக்குமுறைகளும் அடக்குமுறைகளும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும். இது தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் நற்பெயரை பெற்றுத் தராது.
ஆகவே, தடா அப்துல் ரஹீம் மீதான குண்டர் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழக முதல்வரையும், காவல்துறை தலைவரையும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
இப்படிக்கு
எஸ்.எம். பாக்கர்
தேசிய தலைவர்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்