அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4ன் சார்பில் பிளாஸ்டிக் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் 17.02.2018 அன்று காலை அதிராம்பட்டினம் சாரா கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.
கருத்தரங்கினை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சேகர் தலைமை ஏற்று துவங்கி வைத்தார். சுற்றுச்சூழல் மன்ற தலைவர் வ. விவேகானந்தம் முன்னிலை வகித்தார், செயலாளர் எம்.எப். முஹம்மது சலீம் வரவேற்றார்.
அதிராம்பட்டினம் அரசினர் மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர். அ. அன்பழகன் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் நோய்கள் பற்றியும், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறையின் தலைவர் முனைவர். ச. சிவசுப்பிரமணியன் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் பற்றியும், அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் கே. அன்பரசன் பிளாஸ்டிக் கழிவுகளும் திடக்கழிவு – மேலாண்மை பற்றியும் கருத்துரை வழங்கினர். சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கா. செய்யது அகமது கபீர் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து பேசினார். சேவ் திருப்பூர் மூவ்மெண்ட் அமைப்பை சேர்ந்த சா. அறிவழகன், என்வீரோ பேக் நிறுவனத்தை சேர்ந்த கே. ஜெயந்த், ரா. சீனுவாசன் ஆகியோர் கலந்துகொண்டு சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத கேரி பைகள் பற்றி விளக்கமளித்தனர்.
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளை சேர்ந்த தேசிய பசுமைப்படை மாணவர்கள் கலந்துகொண்டு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என உறுதி மொழி எடுத்தனர். கூட்டத்தில் சுற்றுச்சூழல் மன்ற நிர்வாகிகள், அதிரை பேரூராட்சி ஜமாத்தார்கள் , பஞ்சாயத்தார்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், இளைஞர் அமைப்பினர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தூய்மை தூதுவர்கள், தன்னார்வ தொண்டு அமைப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.
முடிவில் சுற்றுச்சூழல் மன்ற பொருளாளர் எம். முத்துக்குமரன் நன்றி கூறினார்.