ஆட்சி பறிபோய்விடும் என்ற அச்சத்தில் ஜெயலலிதாவின் படம் அவசரகதியில் சட்டமன்றத்தில் திறக்கப்பட்டுள்ளதாக ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன், தேசிய தலைவரான ஜெயலலிதாவின் படத்தை திறக்க, தேசிய தலைவர்களை அழைத்து விழா நடத்தி இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். ஆனால் மறைந்த மாநகராட்சி மேயர் படத்தை திறப்பது போல் ஜெயலலிதாவின் படத்தை திறந்துவைத்துள்ளதாக கூறிய
தினகரன், ஜெயலலிதா நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டாலும், மக்கள் மன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர் எனத் தெரிவித்தார்.
இதனிடையே, ஜெயலலிதா படம் திறக்கப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் தெரிவித்த எதிர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த தினகரன், வருங்காலத்தில் ஸ்டாலினுக்கு அரசியலில் வேலை இருக்காது என விமர்சித்தார். தலைகீழாக நின்றாலும் ஸ்டாலினால் முதல்வராக முடியாது என்பது அவருக்கே தெரியும் எனக் கூறிய டிடிவி தினகரன், கட்சி நடத்த வேண்டும் என்பதற்காக இதுபோன்ற கருத்துகளை அவர் கூறிவருவதாக தெரிவித்தார்.