அறந்தாங்கி: தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு எதிரொலியாக, பழைய டூவீலர்களின் விற்பனை பல மடங்கு உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கு ஏற்பட்டு வந்த இழப்பை ஈடுசெய்யும் வகையில் தமிழக அரசு கடந்த மாதம் பேருந்து கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியது. இதனால் தினசரி பேருந்து மூலம் சென்றுவரும் பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் மிகவும் பாதிக்கப்பட்டனர். பேருந்து கட்டண உயர்வு தங்களது பட்ஜெட்டில் அவர்களுக்கு மிகப்பெரிய துண்டுவிழச் செய்தது. தற்போது ஒரே குடும்பத்தில் இரண்டு பேர் பள்ளி, கல்லூரிக்கோ, தனியார் நிறுவன பணிக்கோ ஒரே ஊருக்கு சென்று திரும்பும் நிலையில், அவர்களுக்கு பேருந்து கட்டணத்தை விட இரண்டு பேர் சென்று திரும்ப இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் செலவு குறைவாக உள்ளது.
இதனால் இதுவரை டூவீலர் வாங்காதவர்கள், தற்போது வாங்க தொடங்கி உள்ளனர். வசதி உள்ளவர்கள் தங்களுக்கு பிடித்த நிறுவனங்களின் புதிய வாகனங்களை வாங்கி வரும் நிலையில், வசதி குறைவானவர்கள், கன்சல்டிங் நிறுவனங்களில் தவணை முறையில் உபயோகப்படுத்தி வாகனங்களை வாங்கி வருகின்றனர்.
இதுகுறித்து அறந்தாங்கியில் டூவீலர் கன்சல்டிங் நிறுவனம் நடத்தி வரும் ஒருவர் கூறியதாவது: இருசக்கர வாகனம் இல்லாத வீட்டில் வாகனம் வாங்க விரும்பும் நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் உள்ளவர்கள், முதலில் மாதத் தவணை அடிப்படையில் உபயோகப்படுத்திய டூவீலரை வாங்குவர். அவர்கள் வாகனத்தை நன்றாக இயக்க பழகிய பின்பு புதிய வாகனத்தை வாங்குவது வழக்கம். ஆனால் தற்போது பேருந்து கட்டண உயர்வைத் தொடர்ந்து அவர்களது செலவினத்தை குறைப்பதற்காக பெரும்பாலானவர்கள் உபயோகப்படுத்திய இருசக்கர வாகனங்களை தவணை முறையில் வாங்கி செல்கின்றனர். பேருந்து கட்டணத்தைவிட ஒரே வாகனத்தில் இரண்டு பேர் சென்று வர பெட்ரோல் விலை அதிகமாக இருந்தாலும் செலவு குறைவாக உள்ளது. ஒருசில பகுதியில் டிக்கெட் கட்டணத்துக்கு சமமாகவும் உள்ளதால், தற்போது உபயோகப்படுத்திய டூவீலர் விற்பனை பலமடங்கு உயர்ந்துள்ளது என்றார்.