தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் உட்பட ஆண்டிப்பட்டி, பெரியகுளம் இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர்கள், மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன், கன்னியாகுமரி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தேமுதிக, பாமக, தமாகா என கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி இன்று தேனி வந்திருந்தார்.
அப்போது காங்கிரசையும், திமுகவையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கழுவி கழுவி ஊத்தினார். அப்போது மோடி பேசியதன் சுருக்கம் இதுதான் :
“காங்கிரஸும் திமுகவும் என்னால் நிம்மதி இல்லாமல் இருக்கிறார்கள். இந்தியா வளர்வதை காங்கிரஸால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. காங்கிரசின் நிதியமைச்சராக சிதம்பரம் இருந்தபோது அவரது மகன் இந்த நாட்டை கொள்ளையடித்தார். வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டி குடும்ப அரசியலை பாஜக ஒழிக்கும்” என்று சொன்னார்.
“வாரிசு அரசியலை பாஜக ஒழிக்கும்” என்று ராகுல் காந்தியைதான் மோடி சொன்னாரா? அல்லது முக ஸ்டாலினை சொன்னாரா? என தெரியவில்லை. ஆனால் டெல்லியில் இருந்து கிளம்பி வந்திருக்கிறதே ஓபிஎஸ் மகனுக்காகத்தான் ! இது வாரிசு அரசியல் ஆகாதா ? அதே மேடையில் ராஜன் செல்லப்பா மகன் ராஜ் சத்யன் இருந்தார் ? இது வாரிசு அரசியல் கிடையாதா ?
இதை தவிர ஜெயக்குமார் மகன், மனோஜ் பாண்டியன் மகன், இவர்கள் எல்லாம் எந்த கணக்கில் வருவார்கள் என்று தெரியவில்லை. கூட்டணியில் உள்ள ஜிகே வாசனே ஒரு வாரிசுதான்.. தமிழிசையே ஒரு வாரிசுதான்… இப்படி லிஸ்ட் பெரிசாகி கொண்டே இருக்கிறது. இருந்தாலும் மோடி மேடையை சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு இதை சொல்லியிருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
ஓபிஎஸ்-ன் வாரிசான ரவீந்திரநாத்துக்கு பிரச்சாரம் செய்த மேடையிலேயே மோடி வாரிசு அரசியலை ஒழிப்போம் எனக் கூறியுள்ளது சமூகவலைதளங்களில் திரும்பவும் ஒரு ரவுண்டு அடித்து கொண்டு வருகிறது.