சென்னை அண்ணாசாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்ட போலீஸ் எஸ்.எஸ்.ஐ ரஷீத், அவ்வழியாக வாகனங்களில் வந்தவர்களிடம் தயவுசெய்து வீட்டைவிட்டு வெளியில் வராதீங்க என்று கண்ணீர்மல்க கைகளைக் கும்பிட்டபடி கெஞ்சினார்.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடுமுழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறி வாகனங்களில் மக்கள் வெளியில் சென்ற வண்ணம் உள்ளனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்துவதோடு தேவையில்லாமல் வாகனங்களில் வந்தவர்களை எச்சரித்தும் அனுப்பி வைத்துவருகின்றனர். மாவட்ட எல்லைகள் மூடப்பட்டாதால் வெளியூர்களிலிருந்து மக்கள் வருவது தடுக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
வெளியில் வரும் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று குறித்த விழிப்புணர்வை போலீஸார் ஏற்படுத்துவதுடன் அவர்களின் கைகளைக் கழுவ வலியுறுத்தி வருகின்றனர். சென்னை அண்ணாசாலை, ஸ்பென்ஸர் பிளாசா அருகில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் (எஸ். எஸ்.ஐ) ரஷீத் என்பவர், இன்று ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அண்ணாசாலை வழியாக வாகனங்களில் வந்தவர்களைப் பார்த்து, இத்தனை பேர் வந்தால் எப்படிக் கட்டுப்படுத்த முடியும். எல்லோரையும் கையெடுத்துக் கும்பிடுகிறேன். தயவு செய்து வெளியில் வராதீங்க. கெஞ்சி, கதறி, அழுது, உங்கள் காலைப் பிடித்துக் கேட்கிறேன். உங்கள் காலைத் தொட்டு கும்பிடுகிறேன். நிலைமையைப் புரிந்துகொள்ளுங்கள்.
நீங்கள் ஒத்துழைப்பு கொடுத்தால்தான் குறைக்க முடியும். கெஞ்சி கேட்கிறேன், தயவு செய்து வராதீங்க. நம் நாட்டிற்காகக் கேட்கிறேன். உங்கள் காலில் விழக்கூட நான் தயார். இதைவிட சொல்வதற்கு வேறு வார்த்தைகள் இல்ல. நாட்டிற்காக நமக்காக வீட்டிற்காக சொல்கிறேன். தயவு செய்து கெஞ்சி கேட்கிறேன். வளர்ந்த நாடுகளால் கூட ஒன்றும் செய்ய முடியவில்லை.
நாம் வளர்ச்சியடையாத, மக்கள் பெருக்கம் அதிகம் உள்ள நாடு. நாம் எல்லோரும் சுயமாக, ஒற்றுமையாக இருந்தால்தான் கட்டுப்படுத்த முடியும். தயவு செய்து வெளியில் வராதீங்க. உங்கள் காலைத் தொட்டு வணங்குகிறேன் என்று கண்ணீர்மல்க கூறினார்.
போலீஸ் எஸ்.எஸ்.ஐ, ரஷீத் விழிப்புணர்வு செய்துகொண்டிருந்த சமயத்தில் அவ்வழியாக டூவீலரில் இளைஞர் ஒருவர் வந்தார்.
ஹெல்மெட் அணிந்திருந்த அந்த இளைஞர், பைக்கிலிருந்து கீழே இறங்கி, போலீஸ் எஸ்.எஸ்.ஐ அருகில் சென்றார். திடீரென அந்த இளைஞர், போலீஸ் எஸ்.எஸ்.ஐ காலில் விழுந்தார். அதை அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். பின்னர் போலீஸ் எஸ்.எஸ்.ஐ-யிடம் கையைக் குலுக்கிவிட்டு அந்த இளைஞர் அங்கிருந்து சென்றார்.
சென்னை அண்ணாசாலையில் போலீஸ் எஸ்.எஸ்.ஐ ரஷீத்தின் இந்த விழிப்புணர்வைக் கேள்விபட்ட சக காவலர்கள் அவருக்கு பாராட்டினர்.