தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அடுத்த ராஜாமடம்,மல்லிப்பட்டிணம் பகுதிகளில் தினமும் இரவு நேரங்களில் மணல் கொள்ளை நடைபெற்று வருவதையும், அதிகாரிகள் அதனை கண்டுகொள்வதில்லை என்பதையும் கண்டித்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு அதிரை எக்ஸ்பிரஸில் செய்தி வெளியிட்டுருந்தோம்.
மேலும் அவ்வாறு திருட்டு மணல் ஏற்றிச் செல்லும் லாரிகள், ஈசிஆர் சாலையில் அதிவேகத்தில் செல்வதாகவும், இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்ததையும் குறிப்பிட்டிருந்தோம். மேலும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கூட திருட்டு மணல் ஏற்றி வந்த லாரி ஈசிஆர் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்நிலையில் நேற்று இரவு மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக 5 லாரிகளை அதிரை காவல்துறையினர் பிடித்து பறிமுதல் செய்ததாகவும், பின்னர் அதிரை காவல் நிலையத்திற்கு 4,5 கார்களில் கறைவேட்டிக்காரர்கள் படையெடுத்து சென்றதாகவும், அங்கு அவர்கள் சுமார் அரைமணி நேரமாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அவர்கள் காவல் நிலையத்தை விட்டு வெளியேறியதும், பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள் உடனடியாக விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அப்படியானால் அதிகாரத்தில் உள்ளவர்கள் தவறு செய்தால் ஒரு சட்டம், சாமானியன் தவறு செய்தால் ஒரு சட்டமா என குமுறுகின்றனர் அதிரைவாசிகள்.
அதிரை காவல்துறையின் இத்தகைய நடவடிக்கை மணல் கடத்தும் மாஃபியாக்களுக்கு அதிரை காவல்துறை உடந்தையாக இருக்கிறதா என்ற சந்தேகத்தை பலமாக எழுப்புகிறது.