2019-ம் கல்வியாண்டு முதல் ப்ளஸ் ஒன் பொதுத்தேர்வு மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ப்ளஸ் ஒன் பொதுத் தேர்வுக்கு 600 மதிப்பெண் ப்ளஸ் டூ பொதுத் தேர்வுக்கு 600 மதிப்பெண் என இரண்டு ஆண்டுகளுக்கும் சேர்த்து 1200 மதிப்பெண் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த முறையில் இப்போது முக்கிய மாற்றங்களை பள்ளிக்கல்வித்துறை தற்போது கொண்டுவந்துள்ளது.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் , 2019-ம் ஆண்டு முதல் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.
உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களின் 12-ம் வகுப்பு மதிப்பெண் மட்டுமே இனி கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ப்ளஸ் ஒன் , ப்ளஸ் டூ பொதுத் தேர்வு மதிப்பெண்ணுக்கு தலா 600 மதிப்பெண் வீதம் தனித்தனியே மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். பத்தாம் வகுப்பு , ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் டூ வகுப்பு பொதுத் தேர்வுகள் கடினமாக இருப்பதாக மாணவர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது. மாணவர்களின் மனஅழுத்தத்தை குறைக்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.
எனவே ப்ளஸ் ஒன் வகுப்பிற்கு பொதுத் தேர்வு நடத்தப்படும். ஆனால் , தேர்வு மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என அமைச்சர் தெரிவித்தார்.