சேலம் மாவட்டம், வேம்படிதாளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1500க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில், அரசு பெண்கள் விடுதியும் உள்ளது. இங்கு, 100-க்கும் மேற்பட்ட மாணவியர் தங்கியுள்ளனர். பள்ளியில், வேதியியல் முதுகலை பட்டதாரி ஆசிரியராக பணியாற்றியவர் பாலாஜி. உதவி தலைமை ஆசிரியராகவும் இருந்துள்ளார். மாற்றுத்திறனாளியான அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன.
கடந்த ஆண்டு, பிளஸ் 2 முடித்த மாணவி ஒருவரின் பெற்றோர், சமீபத்தில், தலைமை ஆசிரியரை சந்தித்து, புகார் ஒன்றை தெரிவித்தனர்.
அதில், பிப்ரவரியில், பாலாஜி, வேதியியல் ஆய்வகத்தில், மாணவியை பலாத்காரம் செய்துள்ளான். இதனால், மாணவி தற்போது, கர்ப்பமாக இருப்பதாக பெற்றோர் கூறினர். இதனையடுத்து, உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த பாலாஜி மருத்துவ விடுப்பில் செல்வதாக கூறி தலைமறைவானார்.
இதையடுத்து தலைமை ஆசிரியர் அமுதா காவல் நிலையில் புகார் அளித்தார். அதனடிப்படையில் பாலியல் குற்றங்களில் இருந்து சிறார்களை பாதுகாக்கும் ‘போக்சோ’ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து தலைமறைவாக உள்ள பாலாஜியை தேடி வந்தனர். இந்நிலையில், அரசு பள்ளி உதவி தலைமையாசிரியர் ரமேஷை போலீசார் நேற்று போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பலாத்கார சம்பவங்களும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.