திருவாரூர்-காரைக்குடி இடையிலான ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் காரைக்குடி-பட்டுக்கோட்டை வரையிலான பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த ஆண்டு முதல் பயணிகள் ரயில் சேவை நடைபெற்று வருகிறது. எஞ்சிய பணியான பட்டுக்கோட்டை-திருவாரூர் இடையிலான அகல ரயில் பாதை பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் பட்டுக்கோட்டை-திருவாரூர் இடையிலான வழித்தடத்தில் இன்று சனிக்கிழமை(09.03.2019) காலை என்ஜினை இயக்கி சோதனை நடத்தப்பட்டது.
தெற்கு ரயில்வேவின் கூடுதல் பொது மேலாளர் ஏ.கே. மிஸ்ரா, திருச்சி கொட்ட ரயில்வே மேலாளர் ஏ. உதயகுமார்ரெட்டி, முதன்மை பொறியாளர் இளம்பூர்ணம், துணை முதன்மை பொறியாளர் ஜே. சாம்சன் விஜயகுமார் மற்றும் ரயில்வே அதிகாரிகள் ரயில் இன்ஜின் மூலமாக ஆய்வுப்பணிகளை மேற்கொண்டனர்.
முன்னதாக ரயில்வே உயர் அதிகாரிகளை பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நலச்சங்கத்தின் தலைவர் என். ஜெயராமன், செயலாளர் வ. விவேகானந்தம், துணை தலைவர் கா. லெட்சுமிகாந்தன், பொருளாளர் பி. சுந்தரராஜூலு, உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் சால்வைகள் அணிவித்து வரவேற்றனர். இந்த ஆய்வு பட்டுக்கோட்டையில் தொடங்கி திருவாரூரில் நிறைவுபெறுகிறது. விரைவில் இவ்வழித்தடத்தில் பயணிகள் ரயில் போக்குவரத்து துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.