திமுக இளைஞரணி செயலாளராக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
திமுகவின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் அண்மையில் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை அளித்தார். இதனையடுத்து அப்பதவிக்கு நிர்வாகியை தேர்வு செய்யும் பணியை கட்சியின் தலைமை மேற்கொண்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலினை நியமனம் செய்து திமுகவின் பொதுச்செயலாளர் அன்பழகன் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
முன்னதாக உதயநிதி குறித்து பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் இளைஞரணிக்கு வருவதை வரவேற்கிறேன்; உதயநிதி வருகையால் திமுக இளைஞரணி பிரகாசமாகும் என தெரிவித்தார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். மக்களவைத் தேர்தலுக்கு பின் திருச்சியில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் பேசிய உதயநிதி, தனக்கு பொறுப்பு தேவையில்லை என்றும் தொண்டனாகவே இருந்து சேவை செய்ய விரும்புவதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் அவருக்கு கட்சியின் முக்கிய பொறுப்பை திமுக கொடுத்துள்ளது.
ஆனால் உதயநிதிக்கு பதவியை கொடுத்ததால், திமுக வாரிசு அரசியல் செய்வதாக எதிர்க்கட்சிகளும் அரசியல் விமர்சகர்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.
உதயநிதிக்கு பதவியை கொடுத்தது திமுகவுக்கு ஏற்றமா ? இறக்கமா ? காலம் தான் பதில் சொல்லும்.