தொகுதிக்கு வெளியே இருந்து பிரசாரத்துக்காக அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சி பணியாளர்கள், தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் இன்று மாலை 6 மணிக்கு பிறகு தொகுதியைவிட்டு வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் மக்களவை பொதுத்தேர்தல்கள் மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுதினம் (18ம் தேதி) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையும், மதுரை தொகுதிக்கு மட்டும் காலை 7 மணி முதல் மாலை 8 மணி வரையும் நடைபெறும். இன்று மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவுகள் முடிவடையும் வரையில் கீழ்க்கண்ட விதிமுறைகள் செயலில் இருக்கும்:
தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலத்தை யாரும் ஒருங்கிணைத்து நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது.
தேர்தல் தொடர்பான விவகாரங்களை திரைப்படம், தொலைக்காட்சி, எப்.எம். ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், டிவிட்டர் போன்ற அல்லது இதுபோன்ற சாதனம் வாயிலாக பொது மக்களின் பார்வைக்கு வைக்கக்கூடாது. எஸ்எம்எஸ் மற்றும் இணையம் உட்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்பையும் இது உள்ளடக்கும்.
பொதுமக்களில் எந்தவொரு நபரையும் ஈர்க்கிற வகையில், இசை நிகழ்ச்சி அல்லது திரையரங்க செயல்பாடு அல்லது ஏதேனும் பிற கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்தக்கூடாது. மீறினால் 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
தொகுதிக்கு வெளியே இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சி பணியாளர்கள் மற்றும் தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் இன்று மாலை 6 மணிக்கு மேல் அந்த தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.
வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உட்பட வாகன அனுமதிகள், இன்று மாலை 6 மணி முதல் காலாவதியாகிவிடும்.
கல்யாண மண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்கி இருக்க கூடாது.
வாக்குப்பதிவு நாளன்று
ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இருந்து தனி அனுமதி பெற்று அவரது பயன்பாட்டிற்கான ஒரு வாகனம், தேர்தல் முகவரின் பயன்பாட்டிற்கான ஒரு வாகனம் மற்றும் கட்சி பணியாளர்களின் பயன்பாட்டிற்கான மற்றொரு வாகனம் என மூன்று வாகனங்கள் வைக்க அனுமதி உண்டு.
வாக்காளர்களை வாகனங்களில் வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கும், வாக்குச்சாவடிகளில் இருந்து அழைத்துச் செல்வதற்கும் வேட்பாளர் அல்லது முகவர் உள்ளிட்ட யாருக்கும் அனுமதி இல்லை.
வேட்பாளர்களின் அரசியல் கட்சிகளின் தற்காலிக பிரச்சார அலுவலகம் வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர்கள் தொலைவில் அமைக்கப்படலாம். அங்கு இரண்டு பேர் மட்டுமே இருக்க வேண்டும். தேவையில்லாத கூட்டத்தை அவர்கள் அனுமதிக்க கூடாது.
இன்று மாலை 6 மணிக்கு மேல் ஏதேனும் கருத்துக்கணிப்பு அல்லது பிற வாக்குப்பதிவு ஆய்வுகள் ஊடகங்களில் வெளியிடக்கூடாது. அதேபோன்று கடந்த 11ம் தேதியில் இருந்து மே மாதம் 19ம் தேதி மாலை 6.30 மணி வரை வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கும் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.