பொள்ளாச்சி பாலியல் குற்றத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசின் நண்பரான பார் நாகராஜ் எனப்படும் நாகராஜ் தற்போது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அடுத்தடுத்த செய்திகள் வெளியாகி வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
200க்கும் மேற்பட்ட பெண்களை பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை செய்து, பணம் பறித்து, மோசமாக கொடுமை செய்த கும்பல் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறது. கைது செய்யப்பட்ட 4 பேர் தற்போது நீதிமன்ற காவலில் இருக்கிறார்கள்.
இந்த கும்பல் குறித்து முதலில் புகார் அளித்தது பொள்ளாச்சியை சேர்ந்த பெண் ஒருவர். இந்த நிலையில் இந்த வீடியோ தொடர்பாக முதலில் புகார் அளித்த பெண்ணின் அண்ணனை நான்கு பேர் கொண்ட கும்பல் சில நாள் முன் மோசமாக தாக்கி இருக்கிறார்கள். புகாரை வாபஸ் பெற சொல்லி தாக்கி இருக்கிறார்கள்.
பார் நாகராஜ், பாபு, செந்தில் குமார், வசந்த குமார் ஆகியோர் இந்த செயலை செய்துள்ளனர். பார் நாகராஜ் ஜெயலலிதா பேரவை செயலாளர். இவர் அதிமுகவில் உறுப்பினராக இருக்கிறார். இவர்களை போலீஸ் மூன்று நாட்களுக்கு முன் கைது செய்தது. இந்த நிலையில் இவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். மூன்று நாட்களில் இந்த 4 பேரும் விடுவிக்கப்பட்டனர்.
பார் நாகராஜ் அதிமுக உறுப்பினர். இதனால் இணையத்தில் இவருக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது. அதேபோல் அதிமுகவிற்கு எதிராகவும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் பொள்ளாச்சி பாலியல் குற்றத்தில் தொடர்புடைய பார் நாகராஜ் எனப்படும் ஏ.நாகராஜ் தற்போது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நாகராஜ் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது. கட்சி ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர். முதல்வர் பழனிசாமி ஆகியோர் உத்தரவை பிறப்பித்துள்ளனர்.