தஞ்சாவூர் மத்துவக்கல்லூரி மாணவர்கள், தேர்தலில் 100 சதவிகிதம் வாக்களிக்க வலியுறுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கை ஒன்று விரலை உயர்த்தியபடி இருக்கும் வடிவில், இருசக்கர வாகனத்தை நிறுத்தி, அதைச் சுற்றி அவர்கள் நின்றுகொண்டு, தவாறமை என்ற வார்த்தை வருவதுபோல செய்துகாட்டியது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
தஞ்சாவூரில், மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. நேற்று தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரியில், வாக்காளர்கள் வாக்களிப்பதற்குப் பணம் வாங்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு நாடகத்தை மருத்துவக் கல்லுாரியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் நடத்தி, அவர்களே நடிக்கவும் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, மருத்துவக் கல்லுாரி மாணவ மாணவிகளின் பைக் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, அவர்களும் தயார் நிலையில் இருந்தனர்.
ஆனால், பைக் ஒட்ட இருந்த மாணவ மாணவிகள் யாரும் ஹெல்மெட் அணியவில்லை. இதைத் தொடர்ந்து, மருத்துவக் கல்லுாரி டீன் குமுதா உள்ளிட்ட, அதிகாரிகள் மாணவ மாணவிகளிடம் ஹெல்மெட் எடுத்து வரவில்லையா எனக் கேட்டனர். அப்போது, தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான அண்ணாதுரை விழிப்புணர்வு நாடகத்தைப் பார்த்துவிட்டு, முடிந்த பிறகு வெளியே வந்தார்.அவரும் பைக் முன்னால் நின்ற மாணவ மாணவிகளிடம் ஹெல்மெட் இல்லாமல் இருப்பதைக் கண்டு, ஹெல்மெட் எங்கே என கேட்டார்.பின்னர் இருசக்கர வாகனத்தின் முகப்பில் தேர்தல் தொடர்பான ஸ்டிக்கர்களை மட்டும் ஒட்டினார்.பின்னர் ஹெல்மெட் அணியாததால் விழிப்புணர்வுப் பேரணியை நடத்தவில்லை.
அதன்பிறகு, மருத்துவகல்லுாரி சார்பில்,“தவறா,மை” என்கிற வார்த்தையுடன், ஆள் காட்டி விரலை உயர்த்திக் காட்டுகிற வடிவில் பைக்கை நிறுத்தி, அதைச் சுற்றி மாணவர்கள் நின்றனர். விரல் பக்கம் தவறா என்ற எழுத்துக்களும் நுனியில் மை என்ற எழுத்தும் வருவது போல் தவறாமை என்பதைக் குறிப்பிடும் வகையில் நின்றனர்.இதை ட்ரோன் கேமரா கொண்டு படம் பிடித்தனர். நூறு சதவிகித வாக்குப்பதிவிற்காக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இதுபோன்று செய்ததாகத் தெரிவித்தனர். இதேபோல் மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தலில் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மாநகராட்சி அலுவலர்கள் அதற்கான வாசகங்கள் அடங்கிய பதாதைகளைப் பிடித்தபடி வாசலில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர், ஹீலியம் நிரப்பப்பட்ட ராட்சத பாலுன் ஒன்றையும் பறக்க விட்டனர்.