கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து இந்தியா சார்பில் தங்கம் வென்றார். இந்த போட்டித் தொடரில், ஆரோக்கிய ராஜ் வெள்ளிப் பரிசு வென்றார்.
இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு தி.மு.க.சார்பில் ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும். வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும். இந்தியாவிற்கான 2 பேரின் சாதனைகளை மேன்மேலும் தொடர வாழ்த்துகிறோம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதேபோல், தங்க மங்கை கோமதிக்கு தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ.5 லட்சம் லட்சம் வழங்கப்பட உள்ளது. கோமதியை ஊக்கப்படுத்துகிற வகையில் ரூ.5 லட்சம் தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளையில் இருந்து வழங்கப்படும் என மாநில தலைவர் கே.எஸ். அழகிரி அறிவித்துள்ளார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் இன்று காலை பேசிய கோமதி மாரிமுத்து, தமிழக முதல்வர் தனக்கு வாழ்த்து தெரிவித்து வீட்டுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், திமுக தலைவர்கள் ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் தன்னை தொடர்பு கொண்டு வாழ்த்தியதாகவும் கூறியிருந்தார்.