சிவகங்கை தொகுதி திராவிட கட்சிகள் பெரும்பாலும் போட்டியிட விரும்பாத தொகுதி. பெரும்பாலும் இத்தொகுதி கன்னியாகுமரி தொகுதி போல கூட்டணி கட்சிகளுக்கே விட்டுக் கொடுக்கப்படும் தொகுதி. இந்த தொகுதியில் திமுக மற்றும் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்ததால் காங்கிரஸ் 9 முறை இந்த தொகுதியில் வென்றுள்ளது. திமுகவும் அதிமுகவும் தலா இருமுறை இந்த தொகுதியை கைப்பற்றியுள்ளன.
இந்த முறையும் திமுக கூட்டணியில் இத்தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியிலும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் பாஜகவின் தேசிய செயலாளர் எச் ராஜா களம் இறங்கவுள்ளார் என்று பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.
அதிமுகவுடன் கூட்டணி பேசுவதற்காக மத்திய அமைச்சர் பியுஸ் கோயல் தமிழகம் வந்தபோது அதிமுகவினர் கூட்டணி பேசும்போதே அவரிடம் முன்வைத்த ஒரு கோரிக்கை தயவு செய்து எச் ராஜாவுக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்காதீர்கள் என்பதுதான். கூட்டணி பேச்சுவார்த்தையின்போது இதை பியுஸ் கோயலும் தலைமையிடம் தெரிவிப்பதாக கூறியிருந்தார்.
சாரணர் தேர்தல், பெரியார் சிலையை இடிப்பேன் என்ற விவகாரத்தில் எச் ராஜாவின் அட்மின் கூறியது பின்னர் நீதிமன்றங்களை விமர்சித்தது என்று அவரது “செல்வாக்கு” ஏகத்துக்கும் எகிறி கிடப்பதால் அவர் போட்டியிட்டால் தங்களுக்கும் அது பாதிப்பை உண்டாக்கும் என்று கருதியே அதிமுகவினர் பியுஸ் கோயலிடம் இந்த கோரிக்கையை முன்வைத்ததாக கூறப்படுகிறது.
கடந்த 2014 தேர்தலில் சிவகங்கையில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அதிமுகவின் செந்தில்நாதன். சிட்டிங் எம்பி யான இவர் தற்போதும் வாய்ப்பு கேட்டு விருப்ப மனு அளித்துள்ளார். இந்நிலையில் அதிமுக கூட்டணியில் சிவகங்கை தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனால் எதிர்பார்த்தது போலவே சிவகங்கை தொகுதியில் எச். ராஜா தான் வேட்பாளராக களமிரங்குவார் என அரசியல் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.