“சனாதன கல்வியை வேரறுப்போம்” என்ற தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநாடு நடைபெற்றது. இதில், அக்கட்சி தலைவர் திருமாவளவன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த கருத்திற்கு வருத்தம் தெரிவித்து திருமாவளவன் வீடியோ வெளியிட்டிருந்தார். இருந்தும் அதனை ஏற்க மறுத்து சமூக வலைதளங்களில் அவரை கண்டித்து தொடர் பதிவுகள் இடப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் திருமாவளவன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வலியுறுத்தி உள்ளார். இது சம்பந்தமாக ட்வீட் போட்டுள்ள அவர், “இந்து கோவில்கள் குறித்து இழிவாக பேசிய தீயசக்திகளின் ஒட்டுமொத்த உருவம் திருமாவளவன் மீது தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவன் கோயில் மற்றும் பெருமாள் கோயில்களை இடிப்பேன் தகர்ப்பேன் என்று பேசிய அன்றே இவரை கைது செய்திருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மீண்டும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீண்டும் சர்ச்சை கருத்து ஒன்றை போட்டுள்ளார். அதில் “திருமாவளவனைப்போன்று வன்முறையை தூண்டி வன்முறையை நம்பி அரசியல் செய்கின்ற சட்ட விரோத சக்திகள் பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருப்பது நம் தமிழ் சமுதாயத்திற்கே வெட்கக்கேடு ஆகவே இவரை நாம் அரசியல் பொதுத்தளத்திலிருந்து வெளியேற்றுவதற்கான முழு முயற்சி மேற்கொள்ளவேண்டிய நேரமிது” என்று ட்வீட் போட்டுள்ளார்.
எச்.ராஜாவின் இந்த ட்வீட்டுக்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் சிதம்பரம் கோயிலில் இந்து பெண்ணை அடித்த அர்ச்சகரை என்ன பண்ணலாம் ? என்று எச்.ராஜாவிடம் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.