வங்கக் கடலில் மையம் கொண்ட கஜா புயலானது தமிழகத்தை குறிப்பாக டெல்டா மாவட்டங்களை சூறையாடியது. தமிழகத்தில் இந்த கஜா கோர புயலில் அதி தீவிர காற்றாக அதிரையில் மணிக்கு 111 கி.மீ வேகம் பதிவானது.
இப்படிபட்ட நேரத்தில் கஜா புயல் கரையை கடக்கிறது. ரியாத்தில் இருக்கும் ரியாஸ் பதறுகிறார். தஞ்சாவூர் மாவட்டம் எரிபுறக்கரையில் உள்ள பழைய வீட்டில் தனது குடும்பம் உயிரை கையில் பிடித்துக்கொண்டு இருப்பதே இதற்கு காரணம்.
உடனே தன்னார்வலரான கலீஃபாவை தொடர்புக்கொண்டு பதறுகிறார் ரியாஸ். அவரை சாந்தப்படுத்திவிட்டு உள்ளூரில் இருக்கும் பேராசிரியர் கபீருக்கு தகவல் கொடுக்கப்படுகிறது. உடனே 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அதில் ஏறி அமர்ந்து இலக்கை நோக்கி பயணமானார்கள் பேராசிரியர் கபீர், ஆரிஃப், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் கிருஷ்ணன்.
இருள் சூழ்ந்ததால் ரியாஸின் குடும்பம் இருந்த வீடு கண்ணில் தென்படவில்லை. ஒரு சுற்று சுற்றி வீட்டை கண்டுபிடித்துவிட்டனர். ஆனால் பேய் மழையில் மர பாலம் அடித்துச் செல்லப்பட்டு நீர்சூழ்ந்து வீடு மட்டும் தனி தீவாக காட்சி அளித்தது. அதேசமயம் காற்று மணிக்கு 111 கிலோமீட்டர் வேகத்தில் வீசிக்கொண்டிருக்கிறது.
உடனே ஆம்புலன்ஸில் இருந்த கயிற்றை பயன்படுத்தி நீண்ட போராட்டத்திற்கு பிறகு 3 பேரை மீட்டுவிட்டனர். சிறிது நேரத்தில் அந்த வீடு இடிந்து விழுந்தது. அதன் பிறகு அருகே இருந்த மற்றோரு வீட்டிற்கு சென்று பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது.
ஆம், மரம் முறிந்து விழுந்ததில் 3 வயது ஆண் குழந்தை ஒன்று தலையில் அடிப்பட்டு இறந்துவிட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் அழுது கொண்டிருந்த குடும்பத்தை குழந்தையின் சடலத்துடன் மீட்டு மருத்துவமனையை நோக்கி பயணமானர். வழியில் 3வது குடும்பமும் மீட்கப்பட்டது. ஆனால் பயணம் அவ்வளவு எளிதாக இருந்துவிடவில்லை. சாலையின் குறுக்கே மின்கம்பம்.
தொடர்ந்து முன்னேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். அந்த சமயத்தில் அருகே உள்ள காதர் முகைதீன் கல்லூரியில் தங்கியிருந்த பேரிடர் மீட்பு குழுவினரை தொடர்புக்கொள்ள முயற்சி செய்தனர். ஆனால் இணைப்பு கிடைக்கவில்லை.
உடனே தாங்கள் இருக்கும் இடம், சூழல் குறித்து வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் வீடியோ பதிவை வெளியிட்டனர். புயல் தீவிரமாக இருந்ததால் யாரும் வரவில்லை. வேறுவழியின்றி அவர்களே மின்கம்பத்தை அகற்றிவிட்டு ஒருவழியாக அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையை அடைந்துவிட்டனர்.
தம் உயிரை பணயம் வைத்து 12 உயிர்களை காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், பேராசிரியர் செய்யது அஹமது கபீர், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் கிருஷ்ணன், ஆரிஃப் ஆகியோர் மனித சமூகத்தில் வாழும் நிஜ ஹீரோக்கள். முன் அறிமுகம் இல்லாதவர்களை மீட்பதற்காக இவர்கள் எடுத்த முயற்சி மனிதம் இன்னும் சாகவில்லை என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.
– முஹம்மது சாலிஹ்
9500293659, xmsalih@gmail.com