திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நாச்சிக்குளத்தில் முஸ்லிம்கள், தேவர்கள், தலித்துகள் என அனைவரும் ஒற்றுமையாய் வாழ்ந்து வருகிறார்கள்.
நாச்சிகுளம் அடுத்த சிறுபனையூர் கிராமத்தில் கடந்த (04-08-18) ம் தேதி சாகுல் ஹமீது (வயது 70) என்பவருடைய மீன் பிடி குளத்தில் தண்ணீர் வற்றியது.
அன்றைய தினம் தண்ணீர் மேலும் குறைந்ததால் சேற்றில் ஒரு சாக்கு மூட்டை தெரிந்தது.
இதனைக் கண்ட சாகுல் ஹமீது அதை பிரித்துப் பார்த்தார். அப்போது அதில் ஐம்பொன் சிலை இருப்பது தெரிய வந்தது. இதனால் வருவாய் ஆய்வாளருக்கும், காவல் துறைக்கும் உடனடியாக தகவல் தெரிவித்தார்.
இதன் பின்னர் காவல் துணை கண்காணிப்பாளர் முன்னிலையில் வருவாய் ஆய்வாளரிடம் ஐம்பொன் சிலையை சாகுல் ஹமீது ஒப்படைத்தார்.
தமிழகத்தில் ஆங்காங்கே சிலை கடத்தல்காரர்கள் உலா வரும் நிலையில், ஒரு இஸ்லாமிய பெரியவர் சாமி சிலையை மீட்டு அதிகாரிகளிடம் ஒப்படைத்தது மகிழ்ச்சியையும், மத நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தியதால் சாகுல் ஹமீதை பொதுமக்கள் அனைவரும் வெகுவாக பாராட்டினர்.