சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேலின் பணியை நீடித்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
தமிழக ரயில்வே மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கடந்த மாதம் 30 ஆம் தேதியுடன் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
இதனிடையே சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து வரும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, பொன்.மாணிக்கவேலின் பதவிக்காலத்தை ஓராண்டு காலத்திற்கு நீட்டித்து உத்தரவிட்டது. ஓய்வு பெறும் அதே நாளில் பொன் மாணிக்கவேலுக்கு பதவி நீட்டிப்பு வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக அவர் செயல்படுவார் என்றும் உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியிருந்தது.
இந்நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு கூடுதல் டிஜிபி அபய் குமார் சிங்கை உயர் அதிகாரியாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டு இருந்த து. ஆனாலும் சிலை கடத்தல் குறித்த வழக்குகளை அனைத்தும், பொன்.மாணிக்கவேலே விசாரிப்பார் என்று உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் பொன் மாணிக்கவேலுக்கு சிறப்பு அதிகாரி பணியை நீடித்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனக்கு கொடுக்கப்பட்டுள்ள ஓராண்டுக்குள் அனைத்து சிலைகளையும் மீட்பேன் என பொன். மாணிக்கவேல் சூளுரைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.