சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி மாவட்டத்தில், பிளாஸ்டிக் பயன்பாடு பெரும் சுற்றுச்சூழல் மாசுபட்டை ஏற்படுத்திவருகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, நீலகிரியில் பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள்குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுவந்தது. பிளாஸ்டிக் தடை செய்யப்பட்ட மாவட்டமான நீலகிரியில், ஓரளவுக்கு குறைந்ததே தவிர, முழுமையாகத் தவிர்க்க முடியவில்லை.
கோடை வாசஸ்தலமான நீலகிரிக்கு, ஆண்டுதோறும் சுமார் 40 லட்சம் சுற்றுலாப்பயணிகள் வந்துசெல்கின்றனர். தாங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்கள், தட்டுகள், தின்பண்டங்களின் கவர்கள் போன்ற ஏராளமான பிளாஸ்டிக் குப்பைகளை சாலை ஓரங்களிலும் வனப்பகுதிகளிலும் வீசிவிட்டுச் செல்கின்றனர்.இந்தக் குப்பைகள் மலைபோல் குவிந்து, சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, நீலகிரி மாவட்டத்தின் எல்லைகளில் அமைந்துள்ள பர்லியார், குஞ்சப்பனை, கக்கநள்ளா, நாடுகாணி, தாளூர், சோலாடி, பாட்டவயல், நம்பியார் குன்னு, கெத்தை உட்பட அனைத்து நுழைவு வாயில்களும், நுழைவு வாயில்கள் முதல் ஊட்டி வரையிலான நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள கடைகள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், வணிக வளாகங்கள் மற்றும் வனப்பகுதிகளில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டுள்ள குளிர்பானங்கள் மற்றும் உணவுப் பொருள்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை, வரும் சுதந்திர தினமான ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி முதல் அமலுக்குவருகிறது.
‘நீலகிரி வரும் சுற்றுலாப் பயணிகள், பிளாஸ்டிக் பாட்டில்களை எடுத்து வர வேண்டாம். நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகளில் இந்தப் பொருள்களை விற்பனை செய்ய வேண்டாம். மறுசுழற்சி செய்யக்கூடிய பாட்டில்கள் மற்றும் கேன்களை குடிநீர் பாட்டில்களுக்கு மாற்று பொருளாகப் பயன்படுத்தவும், நெடுஞ்சாலைகள், சுற்றுலாத் தலங்கள், பொது இடங்களில் சுத்தமான குடிநீர் கிடைக்கப் பெறும் வகையில் சுத்திகரிக்கும் குடிநீர் கருவிகள் தற்சமயம் பொருத்தப்படும். அடுத்த கட்டமாக, அனைத்து இடங்களுக்கும் இது விரிவாக்கம் செய்யப்படும். நீலகிரியின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.