பாரதிய ஜனதா கட்சியில் இருந்தவர் கல்யாணராமன். இவர் காக்கைச் சித்தர் கல்யாணராமன் என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் உள்ளார். இவர் இஸ்லாமிய மதத்திற்கு எதிரான கருத்துகளை பதிவிட்டு வந்ததாக கல்யாணராமன் மீது பல புகார்கள் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்துள்ளது. இதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு (சைபர் கிரைம் ) போலீசார் கல்யாணராமன் ஃபேஸ்புக்கை பார்த்து புகாரை உறுதி செய்து கொண்டு, கல்யாணராமன் மீது 153ஏ, 295, 505 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனா்.
இன்று காலை அகமதாபாத்திலிருந்து விமானத்தில் சென்னை திரும்பிய கல்யாணராமனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சென்னை காவல் ஆணையா் அலுவலகம் கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கல்யாணராமன், பாஜக சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்றுள்ளார். மேலும், காங்கிரஸ் மற்றும் தி.மு.கவை மிகக் கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார். மேலும், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டவர்களை ஒருமையிலும் விமர்சனம் செய்துபதிவிட்டுள்ளார்.