வங்க கடலில் உருவாகி உள்ள கஜா புயல் இன்று அதிகாலை நிலவரப்படி, சென்னைக்கு கிழக்கே 780 கிலோ மீட்டர் தூரத்திலும், நாகைக்கு கிழக்கு- வடகிழக்கே 870 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடைந்து மேற்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர், கஜா புயல் படிப்படியாக வலுவிழந்து நாளை மறுநாள் வியாழக்கிழமை முற்பகலில், நாகைக்கும் பாம்பனுக்கும் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கஜா புயலால் நாளை இரவு தொடங்கி நாளை மறுநாள் வரை சில மாவட்டங்களில் மிக கன மழை பெய்யக் கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 20 சென்டி மீட்டர் வரையும், ஒரு சில இடங்களில் 20 சென்டி மீட்டருக்கு அதிகமாகவும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் மீனவர்களும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று தமிழக அரசின் மீன்வளத்துறை சார்பிலும், கடலோர காவல் நிலையம் சார்பிலும் அதிரை முழுவதும் ஒலிபெருக்கி மூலம் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.