தமிழகத்தில் பருவமழை சரியாக பெய்யாததால் மாநிலம் முழுவதும் வறட்சி நிலவுகிறது. தலைநகர் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. நிலத்தடி நீர்மட்டத்தின் அளவும் அதளபாதாளத்திற்கு சென்றுவிட்டது.
தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சனையை சரிசெய்ய தமிழக அரசு, மழைநீர் சேகரிப்பு திட்டத்தை முழுமையாக அமல்படுத்திட திட்டமிட்டுள்ளது. அதன் அடிப்படையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் தேர்வுநிலை பேரூராட்சியின் சார்பில் பொதுமக்களுக்கு ஓர் வேண்டுகோள் விடுக்கப்பப்பட்டுள்ளது.
அதில், அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள், வங்கிகள், மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள், பள்ளிவாசல் கட்டிடங்கள், தனியார் வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு அவசியம் ஏற்படுத்த வேண்டும் என்றும் வருங்கால சந்ததிகளின் நலனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தந்து அனைத்து கட்டிடத்திலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பை ஏற்படுத்திட வேண்டும் என அதிரை பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.