பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளுக்கு நடைபெற்ற கூட்டு பாலியல் பலாத்கார வீடியோ காட்சிகள் வெளியானது. இது தமிழகத்தையே கொந்தளிக்க வைத்தது.
இந்த விவகாரத்தில் உடனடி விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளி யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என கல்லூரி மாணவ, மாணவிகள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் அறிக்கை கேட்டுள்ள நிலையில் மாநில மகளிர் ஆணையத் தலைவி கண்ணகி பாக்கியநாதன் விசாரணை நடத்தினார்.
அப்போது அவர் கூறுகையில், கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிக்கை அளித்ததன் அடிப்படையில் நேற்று விசாரணை மேற்கொண்டோம். இதில் காவல் துறையும் விசாரணை நடத்தி வருகிறது.
பெண்கள் அவர்களது குறைகளைச் சொன்னால் நடவடிக்கை எடுப்போம். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை குறிப்பிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனிடம் விசாரணை நடத்துவோம். பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்களை வெளிப்படுத்தக் கூடாது.
பாரபட்சம் இல்லாமல் விசாரணை நடத்துவோம். இவ்வளவு ஏன் தேவைப்பட்டால் தமிழக சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகனிடமும் விசாரணை நடத்துவோம். இது தொடர்பாக 044-28592750 என்ற எண்ணுக்கு பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்கலாம் என்றார்.
முதலில் கோவை மாவட்ட காலவல்துறையிடம் இருந்த வழக்கு சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 11.30 மணியளவில் இவ்வழக்கை சிபிஐ க்கு மாற்றி தமிழக அரசு அறிவிப்பானை வெளியிட்டுள்ளது.