சார்ஜாவில் வசித்து வரும் கிரன் பாபு, சனம் சாபூ சித்திக் என்ற பெண்ணை கடந்த 2016ல் கேரளாவில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சார்ஜாவில் கடந்த ஜூலை 2018ல் பெண் குழந்தை பிறந்தது.
இக்குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் கோரி விண்ணப்பித்த போது, ஹிந்து மதத்தைச் சேர்ந்த தந்தைக்கும், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்த குழந்தை என்பதால் விதிகளின்படி பிறப்பு சான்றிதழ் அளிக்க முடியாது என அதிகாரிகள் கைவிரித்துள்ளனர்.
இதனால் நீதிமன்றத்தில் சென்று தடையில்லா சான்று கோரி விண்ணப்பித்தார் கிரன் பாபு. இருப்பினும் 4 மாத முயற்சிக்கு பலனளிக்காமல் போனது.
வெளிநாட்டவர்களுக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் திருமண சட்டவிதிகளின்படி முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஆண், முஸ்லிம் இல்லாத வேறு மதத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பெண் வேற்று மதத்தைச் சேர்ந்த ஆணை திருமணம் செய்து கொள்ள இயலாது. இதுவே பிறப்பு சான்றிதழ் மறுப்புக்கு காரணமாகும்.
இந்நிலையில் சகிப்புத்மைக்கு முன்னுதாரன தேசமாக திகழும் முனைப்புடன் 2019ம் ஆண்டினை சகிப்புத்தன்மை ஆண்டாக அறிவித்தது ஐக்கிய அரபு அமீரகம். வெவ்வேறு கலாச்சாரங்களை உள்ளடக்கிய மக்கள் ஒவ்வொருவரையும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் விதமாக இந்த சகிப்புத்தன்மை ஆண்டு அனுசரிக்கப்படுகிறது.
இதன் பின்னர் மீண்டும் தனது குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் கோரி விண்ணப்பித்தார் கிரன் பாபு, இம்முறை அவரது குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்துக்களின் புனித பண்டிகையான விஷுவிற்கு முந்தைய நாளான ஏப்ரல் 14ம் தேதி அனாம்தா ஏசிலின் கிரன் என்ற அந்த் தம்பதியரின் 8 மாத குழந்தைக்கு பிறப்பு சான்றிதழை அமீரக அரசு கொடுத்துள்ளது. இது வரலாற்றில் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.