மகாராஷ்டிராவில் பப்ஜி விளையாட்டில் மூழ்கிப் போன இரண்டு இளைஞர்கள் தங்கள் உயிரையே இழந்துவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘பப்ஜி’ இளைஞர்களை அடிமையாக்கி வருகிறது. `Player Unknown’s Battlegrounds’ இதுதான் PUBG-யின் விரிவாக்கம். இந்தியாவுக்குள் சில மாதங்கள் முன்னர்தான் காலடி எடுத்து வைத்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தன்வசப்படுத்திக் கொண்டது. பப்ஜி கேமில் சிறுசிறு குட்டித்தீவுகளை உள்ளடக்கிய ஒரு பெரிய தீவில் 100 பேர் களமிறக்கப்படுவார்கள், ஒருவரை ஒருவர் வீழ்த்தி கடைசியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்தான் வெற்றியாளர். இந்த விளையாட்டை நண்பர்களுடனும் இணைந்து விளையாடலாம்.
உயர் தொழில்நுட்பம், உயர்தர கிராபிக்ஸ் காட்சிகள் இவைதான் பப்ஜியின் ப்ளஸ். இதனால்தான் இளைஞர்கள் இளைஞிகள் இதில் மூழ்கிப்போகின்றனர். குறிப்பாக, கல்லூரி மாணவர்கள் தனித் தனி க்ரூப்கள் அமைத்து முழுநேரமும் பப்ஜியில் மூழ்கித் திளைக்கின்றனர். இதனால் பலர் படிப்பையும் கோட்டைவிடுகின்றனர். தற்போது பப்ஜி மோகம் சற்று குறைந்திருந்தாலும், இன்னும் சிலர் பப்ஜிக்குள் மூழ்கிக் கிடக்கின்றனர்.
இந்த நிலையில், மகாராஷ்டிராவில் உள்ள ஹிங்கோலி பகுதியில் கடந்த சனிக்கிழமை (16.3.2019) அன்று, ரயில்வே தண்டவாளத்துக்கு அருகே அமர்ந்து நாகேஷ் கோர், சுவப்னில் அன்னப்பூர்ணே ஆகிய இரண்டு இளைஞர்கள் பப்ஜி கேம் விளையாடியுள்ளனர். அப்போது ஹைதராபாத்திலிருந்து அஜ்மீர் செல்லும் ரயில் வந்துள்ளது. இதைக் கவனிக்காமல் தொடர்ந்து விளையாடிக்கொண்டே இருந்தவர்கள் மீது ரயில் பாய்ந்தது. ரயிலில் அடிபட்டு இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இருவரின் சடலங்களையும் பார்த்த அப்பகுதியில் வசிக்கும் மக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், சடலங்களைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பப்ஜி விளையாட்டால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருவதால் இந்தியாவில் பப்ஜிக்கு தடை விதிக்க வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளன. பப்ஜி விளையாட்டை தடை செய்தால் மட்டுமே, வருங்கால தலைமுறையை பாதுகாக்க முடியும்.