சி றுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இருவரை போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே இழுத்து வந்த மக்கள் அடித்தே கொன்றனர்.
அருணாசலப் பிரதேசத்தில் லோகித் மாவட்டத்தில் டெசூ நகரில் பிப்ரவரி 12-ம் தேதி 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். சிறுமியின் உடலை 5 நாள்கள் கழித்து போலீஸார் மீட்டனர். ஞாயிற்றுக்கிழமை இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீஸார் இருவரை கைது செய்து நீதிபதியிடம் ஆஜர் செய்தனர். போலீஸ் கஸ்டடியில் விசாரிக்க அனுமதியளிக்கப்பட்டது.
டெசூ நகர போலீஸ் நிலைய லாக்கப்பில் அவர்கள் அடைக்கப்பட்டிருந்தனர்.
சிறுமியைக் கொலை செய்தவர்கள் கைது செய்யப்பட்டத் தகவல் ஊருக்குள் பரவியது. நேற்று ஆயிரக்கணக்கானோர் டெசூ நகர போலீஸ் நிலையத்துக்குத் திரண்டு வந்தனர். பின்னர், ஆவேசத்துடன் உள்ளே புகுந்து லாக்கப்பை உடைத்து, குற்றம்சாட்டப்பட்ட இருவரையும் வெளியே இழுத்து வந்து, அவர்களைத் தாறுமாறாகத் தாக்கினர். அடி தாங்க முடியாத இருவரும் கெஞ்சியும் கதறியும் பலன் இல்லை. உயிர் போகும் வரை அடித்துக்கொன்ற கும்பல், நகரில் உள்ள சந்தைப் பகுதியில் உடலை வீசிவிட்டுச் சென்றுவிட்டது.
இருவரின் உடல்களும் நிர்வாண நிலையில் மீட்கப்பட்டது. கொல்லப்பட்ட சஞ்சய் சாபூர், ஜக்தீஸ் லோகர் இருவரும் அஸ்ஸாமைச் சேர்ந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஆவார்கள். கூட்டத்தினரைக் கட்டுப்படுத்த தவறியதாக டெசூ நகர காவல்நிலைய அதிகாரிகள் மூவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
அருணாசலப்பிரதேச மாநில முதல்வர் பெமா காண்டு, ”பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவது காட்டுமிராண்டித்தனமானது. அதே வேளையில், மக்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்ளக் கூடாது” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.