தமிழகத்தில் சுற்றுச்சூழல் நலன் கருதி கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் தடை அமலில் உள்ளது. பிளாஸ்டிக் தொடர்பான அனைத்து பொருட்களும் தடை செய்யப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப் பைகள் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு முன்பை விட குறைந்துள்ளது. ஆனால் முழுமையான தடை அமலில் இருந்தும் அதிரையில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டில் தான் உள்ளன.
அரசின் உத்தரவை மீறி சட்டத்துக்கு புறம்பாக பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு இன்னமும் அரங்கேறி வருகிறது. இவ்விஷயத்தில் அதிரை பேரூராட்சி அதிகாரிகள் மெத்தனபோக்கை கடைபிடித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. அதிரை பேரூராட்சி கண்துடைப்பு நடவடிக்கையாக வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை ஒரு சில கடைகளில் ஆய்வு செய்து அபராதம் விதித்து வருகிறது.
அதிரை பேரூராட்சிக்கு தெரிந்தே பல இடங்களில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே பிளாஸ்டிக் தடை விஷயத்தில் அதிரை பேரூராட்சி நிர்வாகம் கண்டிப்புடன் செயல்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.