அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு ஜுமுஆ மஸ்ஜித் முஹல்லா நிர்வாகக் கமிட்டியின் சார்பில் ஒன்று கூடல்(GET TOGETHER) நிகழ்வு இன்று 25.02.2019 திங்கட்கிழமை அதிரை ரிச்வே கார்டனில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு கடற்கரைத்தெரு ஜுமுஆ மஸ்ஜித் முஹல்லா நிர்வாகக் கமிட்டி தலைவர் M. அப்துல் ரஸாக் தலைமை வகித்தார். ஹாஜி. தாஜுதீன் ஆலிம் கிராஅத் ஓதினார். செயலாளர் M.K. முகம்மது சித்தீக் வரவேற்புரை ஆற்றினார். பொருளாளர் S.M. ஹாஜா முகைதீன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
கடற்கரைத்தெரு ஜுமுஆ மஸ்ஜித் முஹல்லா நிர்வாகக் கமிட்டியின் கௌரவ ஆலோசகர் M. முகம்மது ஜமீல் சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் கடற்கரைத்தெரு வெட்டிக்குளம் தூர் வாருதல் மற்றும் புனரமைப்பு பணி நிறைவடைந்து, அதன் முழுக் கொள்ளளவும் நீர் நிரம்புவதற்கு உறுதுணையாக இருந்து செயல்பட்ட அதிரை நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளைக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் சீர்குலைந்த மின்கம்பங்களை போர்க்கால அடிப்படையில் சீர்செய்து மின் விநியோகம் வழங்கிய அதிரை மின் வாரியத்தின் பணிகளை நினைவு கூர்ந்தும், கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் சிதலமடைந்த அதிரையை, இரவு பகலாக பணியாற்றி போது சுகாதாரத்தை காத்தும், அதிரையை இயல்பு நிலைக்கு திரும்பச் செய்த அதிரை பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் அயராத உழைப்பை போற்றும் வண்ணமாகவும் விருதுகள் வழங்கப்பட்டன.
அதிரை நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை, அதிராம்பட்டினம் பேரூராட்சி, அதிராம்பட்டினம் துணை மின் வாரியம் ஆகியவற்றிற்கு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தெற்கு ரயில்வேயின் துணை தலைமைப் பொறியாளர் திரு. சாம்சன் விருதுகள் வழங்கி கவுரவித்தார்.
இறுதியாக அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத் தலைவர் M.K. முகம்மது சம்சுதீன் நன்றியுரை வாசித்தார். பின்னர் நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் விருந்தோம்பல் நடைபெற்றது.