திருவாரூர்-காரைக்குடி வழித்தடத்தில் அமைந்திருக்கும் அதிராம்பட்டினம் ரெயில் நிலையம் வர்த்தக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த திருவாரூர்-காரைக்குடி அகல ரெயில் பாதை அமைக்கும் பணி நீண்ட சட்ட போராட்டத்திற்கு பிறகு புத்துயிர் பெற்று லோக்கல் ரெயில் வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், நிழலுக்காக நடைமேடைகளில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் தூண்கள் தற்போது பலவீனமாக காட்சி அளிக்கின்றன. அதன் அடிப்பகுதியில் போடப்பட்டிருக்கும் கான்கிரீட் கலவை தற்போது சில்லுசில்லாய் தெறித்துக்கொட்டி இருப்பதே இதற்கு காரணம்.
ரெயில் நிலையம் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்னரே நிலைமை இப்படி என்றால், ரெயிலுக்காக நிழலில் காத்திருக்கும் பயணிகளின் உயிர் உண்மையில் பாதுகாப்பாக தான் இருக்குமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.