தற்போது மழை பொழிவு என்பது மிகவும் அரிதான ஒன்றாக மாறிவிட்டது. அப்படியே மழை பெய்தாலும் அம்மழைநீரை சேமிக்க வேண்டிய அரசோ கொஞ்சமும் பொறுப்பின்றி நடந்துகொள்கிறது. தற்போது பெய்து வரும் மழையால் கிடைக்கும் நீர் அனைத்தும் முறையான திட்டமிடல் இல்லாததன் காரணமாக கடலில் சென்று வீணாக கலக்கிறது.
அதேபோல் தண்ணீர் விஷயத்தில் அதிரையிலும் அதே நிலைதான். அதிரையின் பழமையான தெருக்களில் கடற்கரைத் தெருவும் ஒன்று. இங்கு 3000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இப்பகுதி அதிரை பேரூராட்சியால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. பலமுறை நேரில் சென்று பலகோரிக்கைகளை வலியுறுத்தியும் நிறைவேற்றியபாடில்லை.
கடந்த மாதம் கடற்கரைத்தெரு வாசிகள் தங்கள் சொந்த செலவிலேயே அங்கு உள்ள வெட்டிக்குளத்தை தூர்வாரி, நீர்நிலை பராமரிப்பிற்கு முன்மாதிரியாக திகழ்ந்தனர். இந்நிலையில் கடற்கரைத்தெரு வெட்டிக்குளத்திற்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் புதர்கள் மண்டி கிடக்கிறது. தற்போது அதிரையில் நல்ல மழை பெய்து வரும் நிலையில், வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டிருந்தால் வெட்டிக்குளத்திற்கு தண்ணீர் சீராக வரும்.
ஆனால் பலவருடங்களாக தூர்வாரப்படாததால் குளத்திற்கு தண்ணீர் வராமல் உள்ளது. இந்நிலையில் வெட்டிக்குளத்திற்கு தண்ணீர் வரும் பாதையை தூர்வார வலியுறுத்தி அதிரை பேரூராட்சி செயல் அலுவலரிடமும், ஏரிப்புறக்கரை ஊராட்சி அலுவலரிடமும் கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் நேரில் மனு அளித்தனர்.