தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே ஈசிஆர் சாலையில் இன்று காலை கேரளாவில் இருந்து வந்த கார் ஒன்று பயணித்துக்கொண்டிருந்தது. அப்போது திடீரென காரின் டயர் வெடித்ததில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கார், எதிரே வந்த வேன் மீது மோதி விபத்திற்குள்ளானது.
இந்த கோர விபத்தில் காரில் இருந்தவர்கள் மற்றும் வேன் ஓட்டுநர் ஆகியோர் படுகாயமடைந்தனர். விபத்தில் பலத்த காயம் அடைந்த காரில் பயணித்த நால்வரும், பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கேரளாவை சேர்ந்த ஸ்ருதி என்பவர் உயிரிழந்தார். அதனைத்தொடர்ந்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷைனி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த கேரளாவைச் சேர்ந்த சுதி, ஷைனி ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த கவின் மற்றும் நிவின் ஆகிய இரண்டு குழந்தைகளும் தற்போது மேல் சிகிச்சைக்காக திருச்சி காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இரு குழந்தைகளுக்கு பாதுகாப்பாக தமுமுக நிர்வாகி ஷஃபிர் மற்றும் SDPI நிர்வாகி புரோஸ்கான் உடன் இருக்கின்றனர். கேரளாவில் இருந்து உறவினர்கள் வந்தவுடன், பிரேத பரிசோதனை செய்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
ஈசிஆரில் ஏற்பட்ட கோர சாலை விபத்தில் வெளி மாநிலத்தவர் இருவர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.