அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியதாகவும், அதற்கு ‘மகா’ என பெயரிடப்பட்டுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
லட்சத்தீவு பகுதியில் நிலை கொண்டுள்ள மகா புயல் நாளை தீவிர புயலாக மாறி வடமேற்கு திசையில் நகரும் என தெறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மகா புயலால் காற்றின் வேகம் 95 முதல் 110 கிமீ இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அரபிக்கடலில் கியார் புயல் நிலைகொண்டுள்ள நிலையில் தற்போது இரண்டாவதாக மகா என்னும் புயல் உருவாகியுள்ளது.
மகா புயலால் தமிழகத்தின் அடுத்த 24 மணிநேரத்திற்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் தொடர் மழையும், விட்டு விட்டு கணமழையும் பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, காரைக்கால், கடலூர், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்யும் என்றும் மீனவர்கள் மாலத்தீவு, லட்சத்தீவு மற்றும் அரபிக்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.