பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கூடிய சட்டப்பேரவையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கிடையாது என பேரவை தலைவர் தனபால் தெரிவித்துள்ளார்.
தமிழகமெங்கும் இச்சட்டத்திற்கு எதிராக போராட்டம் வெடித்துள்ள நிலையில் இஸ்லாமிய கூட்டமைப்பினர் நேற்று இரவு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் NRC, NPR சட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் எனவும் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில் இன்று சட்டமன்றத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் தீர்மானம் நிறைவேற்றகோரி பேரவையில் வலியுறுத்தினார். அதற்கு பதிலளித்து பேசிய சபாநாயகர் தனபால், CAA-விற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர முடியாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.