மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த முஸ்லிம் விரோத குடியுரிமை திருத்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் அதிமுக ஆதரித்தது. இதனால் அக்கட்சிக்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. குறிப்பாக ஜமாஅத் பொறுப்பில் இருந்து அதிமுக எம்.பி முகமது ஜான் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டதை முன்னுதாரணமாக கொண்டு தமிழகத்தில் உள்ள ஜமாஅத்கள் செயல்பட வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த சூழலில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கக் கூடிய அதிரையில், சமூகத்திற்கு துரோகம் செய்த அதிமுகவில் இருக்கும் நபர்களை ஜமாஅத்களில் இருந்து நீக்குவதற்கான ஆயத்த பணிகள் முழு வீச்சில் நடைபெற்று தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருப்பதாக அந்த முயற்சியை மேற்க் கொண்டிருக்கும் நபர்கள் அதிரை எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் பலரும் உறவினர்களாக இருப்பதால் நீக்கம் செய்யும் நடவடிக்கையை கிடப்பில் போட வேண்டும் என்று ஒருசாரார் வற்புறுத்துவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை மத்திய பாஜக அரசையும், தமிழக அரசையும் கண்டித்து அதிரையில் நடைபெற்ற போராட்டம் தமிழகம் முழுதும் பரபப்பாக பேசப்பட்டது. ஆனால் இந்தப் போராட்டத்தில் அதிமுகவில் இருக்கும் சில முஸ்லிம் நிர்வாகிகள் பங்கேற்காமல் புறக்கணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
உள்ளாட்சித் தேர்தல் நெருங்குவதால் சீட் பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கில் அதிமுக தலைமைக்கு அவர்கள் அதீத விசுவாசமாக இருந்து வருவதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிரையில் உள்ள 7 ஜமாஅத்களில் இருந்து அதிமுகவினரை நீக்கி தமிழக ஜமாஅத்களுக்கு அதிரை முன்னுதாரனமாக ஆகுமா? என பலரும் எதிர்பார்ப்பில் இருப்பதை சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் பதிவுகள் உணர்த்துகின்றன.