கடந்த 2009ம் ஆண்டு தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றவாளி என அறிவித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு பொதுக்கூட்டம் ஒன்றில், மத்திய அரசுக்கு எதிராகவும், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும் பேசியதாக வைகோ மீது அப்போதைய திமுக ஆட்சியில் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், வைகோ குற்றவாளி என சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சாந்தி தீர்ப்பளித்துள்ளார்.
குற்றவாளி என அறிவிக்கப்பட்டவுடன், தண்டனையை இன்றே வழங்குமாறு வைகோ நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார். அதன்படி,இந்த வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறை மற்றும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும்,இந்த வழக்கில்மேல்முறையீடு செய்ய வைகோவுக்கு ஒரு மாதம் கால அவகாசம் அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
திமுக சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக வைகோ அறிவிக்கப்பட்ட நிலையில், தேசதுரோக வழக்கில் குற்றவாளி என சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், தேர்தலில் போட்டியிடுவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.